Tuesday, May 23, 2017

கங்கைகொண்ட சோழபுரம்

விழுப்புரத்தில் தங்கி இருந்ததால் பக்கத்தில் எங்கயாவது சென்று வரலாம் என்று திட்டம்  போட்டதில், சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றதாலும் ரொம்ப நாளாக போகவேண்டும் என்று வீட்டில் சொன்னதால் கங்கை கொண்ட சோழபுரம் செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம்.

விழுப்புரம் டு கங்கைகொண்டசோழபுரம் சரியாக 100 கிமீ. 2pm க்கு கெளம்பி அரசூர் வரை நான்கு வழி சாலையாகவும் பின்பு இருவழி சாலை வழியாக பண்ருட்டி, நெய்வேலி, சே.தோப்பு,
மீன்சுருட்டி வழியாக 2.30மணி நேர பயணத்தில் கங்கைகொண்டசோழபுரம் அடையலாம்

சென்னை-ல் இருந்து வருபவர்கள் விக்கிரவாண்டி டோல்கே தாண்டியவுடன் இடப்புறம் செல்லும் தஞ்சாவூர், கும்பகோணம் சாலை வழியாக செல்ல வேண்டும். குறுகிய சாலையாக  இருப்பதால் குறைவான வேகத்தில் தான் செல்ல முடியும்.

இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார்.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு, இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.  இந்தயாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய ஊர்.  இந்த கோவிலை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

கங்கைகொண்ட சோழபுரம் உருவாகும் முன் அந்த இடம்  வன்னியபுரம் என்ற சிற்றூராக இருந்தது. வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னி மரக் காடாக விளங்கியது. இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வன்னி மரம் உள்ளது. மேலும் வன்னிய சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியாகவும் உள்ளது.

மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார்.

இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார். கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு. கங்கை கொண்ட சோழபுரம் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

நாங்கள் சென்றது மாலை நேரமென்பதால் வெயில் இல்லமல் சற்று நிம்மதியாக சுற்றி பார்க்க முடிந்தது. கோவிலை சுற்றி புல்தரை மற்றும் செடிகள் நன்றாக பராமரிக்கின்றனர். கோவிலும் சுத்தமா உள்ளது, இதற்கு காரணம் இங்கு அதிகம் மக்கள் வருவது இல்லை. கோவிலில் முதலில் நம்மை வரவேற்பது கோபுரம் இல்லாத ஒரு நுழைவு வாயில்தான்

 இதுமாதிரி கட்டிமுடிக்கப்படாமல் விட்ட இடங்கள்கூட ஒருவகையில் அழகுதான் (குதுப்மினார் சுற்றி உள்ள இடங்கள் மாதிரி).


மேலும் ஒரு மண்டபம் போன்ற அமைப்பும், ஒரு துணைக்கோவிலின் அடித்தளத்தை இங்கு காணலாம். தஞ்சையில் உள்ளது போன்ற நந்தி மற்றும் பெரிய லிங்கமும் உள்ளது.

கோவில் கோபுரம் தஞ்சை கோவிலின் அமைப்பை பிரதிபலிதாலும் இந்த கோவிலை பார்க்கும் போது நமக்கு சிறு பிரமிப்பு ஏற்படாமல் இல்லை. சந்நிதியின்  உள்ள துவாரபாலகர் சிலைகள் அருமையாக உள்ளது, நுணுக்கமான வேலைப்பாடு இல்லாமல் இருந்தாலும் இந்த சிலைகளின் உயர அகலம் நம்மை கண்டிப்பாக வாய்பிளக்க வைக்கும்.

இதேபோல மேலும் இரு சிலைகள் கோவிலின் பக்கவாட்டு வழியிலும் உள்ளன. ஏனோ பெரும்பான்மை சோழர் கால சிற்பங்களில் அவ்வளவு துல்லியம் இருப்பதில்லை. இவர்கள் கட்டிடக்கலைக்கு மட்டும் அதிக  முக்கியத்துவம் கொடுத்துள்ளதை பார்க்கலாம்.

கோவிலின் வலப்பக்கம் ஒரு சிங்கமுக வாயிலும் இந்த வழியாக இறங்கி சென்றால் அருகில் இருக்கும் கிணற்றை அடைவது போலவும் அமைத்துள்ளார்கள். அங்கு சிலர் தவறாக அதை தஞ்சாவூர் செல்லும் சுரங்கம் என்று சொல்லுவதை கேட்டேன். வேக வேகமாக ஓடி ஓடி பார்க்காமல் நிதானமாக கட்டிட அமைப்பையும் ஆயிரம் வயது கொண்ட சிற்பங்களையும் காணும்போது இந்தனை நூற்றாண்டுகளாக இந்த சிற்பங்கள் எத்தனை மனிதர்களை, காலநிலைகளை, எத்தனை கதைகளை அறிந்திருக்கும் என்னும் கேள்வி எழுகிறது.

நேரமிருந்தால் 40 கிமீ தூரத்தில் உள்ள தாராசுரம் கோவிலின் அழகையும் காணலாம். நாங்கள் லேட்டா கிளம்பியதால் தாராசுரம் செல்லாமல் சோழபுரத்தோடு திரும்பினோம். இதற்கு முன்பே சிலமுறை இங்கு நான் சென்றிருந்தாலும் அந்தி சாயும் வேலையிலும் நிலஒளியுலும் சோழனின் பெருமையை பறைசாற்றும் இந்த அற்புதத்தை நான்  கண்டது போல இன்னும் பல சந்ததிகள் கண்டு வியக்கப்போவது உண்மை...



Monday, May 22, 2017

Most dangerous places on the earth

Death Valley- Eastern California

கிழக்கு கலிஃபோர்னியாவில் உள்ளது மரணப்பள்ளத்தாக்கு (Death Valley).

 இந்த இடத்தில் கிட்டத்தட்ட 57.7 செல்சியஸ் (134 ஃபேரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தண்ணீர் இல்லாமல் அதிகபட்சமாக 14 மணி நேரம்தான் இங்கு உயிருடன் வாழ முடியும்.


கற்கள் தன்னிச்சையாக நகரும் அதிசயமும் இங்குதான் நிகழ்கிறது.


நகரும் கற்கள் என அழைக்கப்படும் கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும்.
இத்தகைய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது. இத்தகைய இடங்களில் கற்கள் நகர்ந்ததற்குரிய சுவடுகளும் நகர்ந்த கற்களும் நிழற்படமாகப் பிடிக்கப்பட்டுள்ளன. கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது இதுவரை அறியப்படாத ஒன்றாக உள்ளது, எனினும் இதனைப் பற்றிய ஊகங்களும் கோட்பாடுகளும் உலாவுகின்றன.

ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு இவை நகர்கின்றன. கரடுமுரடான அடிப்பகுதியைக் கொண்ட கற்கள் வரிகள் கொண்ட சுவட்டை உருவாக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கற்கள் கவிழ்ந்து, அதன் வேறொரு முனை நிலத்தைத் தொட்டு அதன் தடப்பாதை திசைமாறுகின்றது. கற்களைப் பொறுத்து, சுவடுகள் திசையிலும் நீளத்திலும் வேறுபாடு கொண்டவையாக உள்ளன. ஒன்றாக புறப்படும் இரு கற்கள் சில குறிப்பிட்ட தூரம் வரை ஒரே திசையில் நகர்ந்து, பின்னர் இடம், வலம் எனத் திசை மாறுகின்றன, சிலவேளைகளில் வந்தவழியே திரும்பவும் நகர்தலும் உண்டு. இரு ஒரே அளவிலான கற்கள் வெவ்வேறு தூரத்தை அடைவதுண்டு

பெரும்பாலான நகரும் கற்கள் பிளேயாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள 850 அடி (260மீ) உயர கரும் தொலமைற்றுக்களாலான குன்றுகளில் இருந்து உருவாகின்றன, ஆனால் சில ஊடுருவிய தீப்பாறைகள் அருகில் உள்ள சரிவில் தோன்றுகின்றன. பொதுவாக இச் சுவட்டுத்தடங்கள் பத்து தொடக்கம் 100 அடி நீளமாகவும் 12 அங்குலம் (8-30செ.மீ) அகலம் கொண்டதாகவும் ,சாதாரணமாக ஒரு அங்குலத்துக்கும் (2.5 செ.மீ) குறைவான ஆழமாகவும் காணப்படுகின்றது. கற்கள் அசைவதற்குத் தேவைப்படக்கூடிய சிறப்பான சூழ்நிலை எனக் கருதப்படுபவை:
  • ஈரப்பதமான ஆனால் நீரால் நிரம்பாத மேற்பரப்பு,
  • மெல்லிய களிமண் படலம்,
  • தொடக்க நிலை அசைவிற்கான விசையாக மிக்க வன்மையான காற்று,
  • கற்களைத் தொடர்ச்சியாக அசைப்பதற்கு வலிமை கொண்ட நிலையாக உள்ள தொடர்ச்சியான காற்று
எனினும் இதுவரை கற்களை நகர்த்தும் விசை எதுவென்பது அறியப்படாத ஒன்றாக உள்ளது


Danakil Desert - Ethiopia

ஆப்ரிக்கா கண்டத்தில் எத்தியோப்பியாவில் உள்ளது இந்த டானாகில் பாலைவனம்.சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் கொண்ட இந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் சீறும் எரிமலைகளும் உண்டு. நச்சு வாயுக்களை உமிழும் வெந்நீர் ஊற்றுகளும்உண்டு.



எப்போது எது வெடிக்கும் என்றே தெரியாத இந்தக் கொடூரமான இடத்தை ’’உலகின் நரகம்’’ என்கிறார்கள். ஆனாலும் சாகசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

Mount Washington (New Hampshire) - United States of America

உலகிலேயே அதிவேகமான காற்று வீசும் இடம் இந்த மவுண்ட் வாஷிங்டன்.



அதிகபட்சமாக ஒரு மணிநேரத்திற்கு 203 மைல்கள் வேகத்தில்  இங்கு காற்று வீசியிருக்கிறது. (ஷோயப் அக்தர் போட்டதே மணிக்கு 160 கிமீ தான்) மேலும் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் குளிர், திடீரென்று ஏற்படும் பனிப்பொழிவு என மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் இந்த சிகரம், உலகின் உயரமான  (கடல் மட்டத்தில் இருந்து 6,288 அடி) மலைச் சிகரங்களுள் ஒன்று.



 Mount Sinabung - Indonesia

இந்தோனேசியா - சுமத்ரா தீவில் உள்ளது இந்த மாபெரும் மலை.. பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும் இந்த மலைதான் கடந்த ஏழு வருடங்களாக அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. ஆம், இந்த சினாபுங் மலை ஓர் எரிமலை.


இந்த எரிமலை 1600 ஆம் ஆண்டில் இருந்து சீற்றமடையாமல் இருந்து வந்துள்ளது. முதற்தடவையாக இது 2010 ஆகஸ்ட் 29 அதிகாலைவெடிக்க ஆரம்பித்தது. 1.5 கிமீ உயரத்திற்கு இதன் தூசுகள் வீசப்பட்டன. குழம்புகள் எரிமலைவாயில் வீழ்ந்தன.

2010 செப்டம்பர் 3 வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 கிமீ உயரத்திற்கு தூசுகள் கிளம்பின. செப்டம்பர் 7 இல் மீண்டும் வெடித்தது. இதன் சீற்றம் அதிகமானதாக இருந்தது. 2013 செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு சினாபுங் மீண்டும் வெடித்தது. 3,700 பேர் இருப்பிடங்களை விட்டு நகர்ந்தனர். மீண்டும் 2013 நவம்பர் 5 இல் வெடித்ததில், வானில் 7-கிமீ தூரத்திற்கு தூசுகள் கிளம்பின.
2014 சனவரி 4 இல் மீண்டும் வெடித்தது. 4,000-மீட்டர் உயரத்திற்கு தூசுகள் கிளம்பின. 2014 பெப்ரவரி 1 இல் மீண்டும் வெடித்தது. 14 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்பள்ளி மாணவர்கள். இவர்கள் எரிமலையைக் காண வந்திருந்தனர்.
கடைசியாக 2016-ஆம் ஆண்டு நவம்பர் வரை தொடர்கிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்ற பயத்திலும், சீற்றம் ஏற்பட்டால் சுமார் 2,500 மீட்டர் வரை தெறிக்கும் எரிமலைக் கற்களிலும் , சூழ்ந்துகொள்ளும் புகைமண்டலத்திலும் யார்தான் வாழமுடியும்?

ilha de queimada grande - snake island - Brazil

பிரேசிலில் இருக்கும் குட்டி பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு ஐந்து பாம்புகள் இருக்கிறதென்றால், இந்தத்தீவில் எத்தனை பாம்புகள் இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள்.


இங்கு இருக்கும் கலங்கரை விளக்கம்கூட ஆட்டோமேட்டட்தான்.. ஏனென்றால் இங்கிருக்கும் பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையவை.



பல்வேறு காலநிலைகளை கொண்ட இத்தீவில் பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழ தகுதியற்ற இத்தீவில் சில ஆராய்ச்சியாளர்களும் பிரேசில் ராணுவமும் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Madidi National Park - Bolivia

உலகத்தில் வித்தியாசமான, விதவிதமான உயிரினங்கள் அதிகம் வாழும் இடம் . இங்கிருக்கும் பறவை இனங்கள் மட்டுமே ஆயிரத்தைத் தாண்டுகிறது.


வித்தியாசமான உயிரினங்கள் இருப்பதாலோ என்னவோ, இங்கே செடிகளை உரசினாலே எரிச்சலும், மயக்கமும் வரும் அளவுக்கு தாவரங்களில் தொடங்கி, விலங்குகள் அனைத்தும் மிகவும் ஆபத்தான, விஷத்தன்மை உடைய ஜந்துக்கள்.  இங்கு சென்று உடலில் சிறிய கீறல் ஏற்பட்டால் கூட ஒட்டுண்ணிகளால் மரணம் ஏற்படலாம.