Tuesday, March 7, 2017

Roof Farm-END

சென்னை, முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்பார்டன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. நம்மையும் அது ஈர்க்க, சோலை போன்றிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தார், வீட்டின் உரிமையாளர், ஜஸ்வந்த் சிங்.

“பூர்வீகம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர். 1937-ம் ஆண்டில் என்னுடைய தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறி விட்டோம். அப்போதிருந்து இப்போது வரை கட்டுமானத் தொழிலைத்தான் பரம்பரையாகப் பின்பற்றி வருகிறோம்.

1978-ம் ஆண்டில் இருந்து இந்த வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். முப்பது ஆண்டுகளுக்கு முன் துளசிச் செடியுடன் ஆரம்பித்த எங்கள் தோட்டம்... இன்று, கீரைகள், காய்கறிகள், மரங்கள், பூ வகைகள் என வனம்போல் காட்சியளிக்கிறது. ஐந்தாயிரம் சதுர அடியில்... அறுபதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள்; இருபதுக்கும் மேற்பட்ட பூச்செடிகள் மற்றும் காய்கறிச் செடிகள்; நாற்பதுக்கும் மேற்பட்ட பழச்செடிகள்; ராசி நட்சத்திர செடிகள்; தென்னை, வில்வம், ருத்ராட்சம், சந்தனம் போன்ற மரங்கள் இங்குள்ளன.

வசம்பு, ஆடாதொடை, நிலவாகை, சித்தரத்தை, கோபுரம்தாங்கி, நேத்திர மூலி, பூனை மீசை,  பிரண்டை, திப்பிலி, வெட்டிவேர், சிறியாநங்கை, வல்லாரை, நொச்சி, கற்றாழை... போன்ற  மூலிகைகளை சிறிய தொட்டிகளில் வளர்த்து வருகிறேன். சந்தன மரங்களுக்கு கீழே, சிறிய பானைகளில் துளையிட்டு வைத்து,  சிட்டுக்குருவிகளுக்கும், சிறிய பறவைகளுக்கும் இடம் அமைத்துளேன்” என்ற ஜஸ்வந்த் சிங் ஒவ்வொரு வகை தாவரமாகச் சுற்றிக் காட்டினார்.

“காய்கறிகள் மாடியில் உள்ளன. தக்காளி, வெண்டை, பீன்ஸ், ஐந்து வகை கத்திரி, முருங்கை, பாகற்காய், முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவரை, குட மிளகாய்,  நான்கு வகை பச்சை மிளகாய்... என காய்கறி வகைகள் உள்ளன. இவற்றை வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்துகிறேன். பின்புறமுள்ள மாடியில், மூன்று வகையான எலுமிச்சை ரகங்கள், நெல்லி, மாம்பழம், நான்கு வகையான ஆப்பிள் ரகங்கள், சப்போட்டா, பலாப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, பேரீச்சை, அத்தி, அன்னாசி, ஆரஞ்சு, சீமைப்பலா, கொய்யா போன்ற பழ மரங்கள் உள்ளன. பழ மரங்களில் மூன்று தேனீப் பெட்டிகள் உள்ளன. வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறோம்” என்று வரிசையாக அடுக்கிய ஜஸ்வந்த் சிங் நிறைவாக,

காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்... மாடியில் செழிக்கும் இயற்கைத் தோட்டம்!
“இங்கு விளையும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் அனைத்தையும் எங்கள் தேவை போக நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுக்கிறோம். நஞ்சில்லா உணவை நாங்கள் உண்பதோடு நண்பர்களுக்கும் கொடுப்பதில் நாங்கள் சந்தோஷமடைகிறோம். நாங்கள் காய்கறிகளை வெளியில் வாங்குவதேயில்லை. இதனால் பணமும் மிச்சமாகிறது. அதை விட சுவையான பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவது எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது” என்றார்.

வீட்டுத்தோட்டத்துக்கு விருது!

கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னையின் சிறந்த வீட்டுத்தோட்டத்துக்கான தமிழக அரசின் விருது ஜஸ்வந்த் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது

ஊட்டம் கொடுக்கும் பஞ்சகவ்யா!
செடிகளுக்குப் பயன்படுத்தும் இடுபொருட்கள் மற்றும் பூச்சிவிரட்டிகள் குறித்துப் பேசிய ஜஸ்வந்த் சிங், “நோய் மற்றும் பூச்சிகளால் செடிகள் தாக்கப்பட்டால்... வேப்பிலை, வேப்பங்கொட்டை, ஆடாதொடை இலை, நொச்சி இலை, துளசி இலை, தும்பை இலை ஆகியவற்றை இடித்து, அவற்றை மாட்டுச் சிறுநீரில் ஊற வைத்து தெளிப்பேன். இக்கரைசலை 15 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கிறேன். ஒவ்வொரு செடிக்கும் 5 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா கொடுத்து விடுவேன். தவிர மாட்டு எருவையும் அவ்வப்போது கொடுப்பேன். இவற்றிலேயே செடிகள் செழித்து வளர்கின்றன. வீட்டுக்கு இயற்கை எரிவாயுக் கொள்கலன் அமைத்துள்ளேன். அதில் கிடைக்கும் கழிவையும் இயற்கை உரமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். தன் தோட்டத்துக்கான உரத்தை, தானே தயார் செய்துகொள்வதுதான் சிறந்ததாக இருக்கும்” என்றார். 

END

(Thanks Vikatan)

No comments:

Post a Comment