Thursday, March 2, 2017

Roof Farm-8

வீடுகளில் மட்டுமல்லாமல் அலுவலகக் கட்டடங்களிலும் தோட்டம் அமைத்து சாதித்து வருகிறார்கள், கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள். அவர்களின் அனுபவத்தைப் பார்ப்போம், வாருங்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தின் மேற்கூரை முழுவதும் செடி, கொடிகள் என பசுமை போர்த்தி இருக்கிறது. 8 ஆயிரம் சதுரடி பரப்பளவில் உள்ள மேற்கூரையில் தோட்டம் அமைக்கப்பட்டு, தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதைப் பராமரிப்பது, சுய உதவிக்குழு பெண்கள்.
நாம் அந்த மாடித்தோட்டத்துக்குச் சென்றபோது... ‘‘அந்த கத்திரிச் செடிக்கு தண்ணீர் ஊத்தும்மா”, ‘‘தக்காளியில் புழு இருக்கும் போல, பூச்சிவிரட்டி அடிங்க” என சுயஉதவிக்குழு பெண்களுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்த சூலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ‘மாதப்பூர்’ பாலு என்கிற பாலசுந்தரம், மலர்ந்த முகத்துடன் நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்.

“இந்தத் தோட்டம் அமைச்சு ரெண்டு வருஷமாச்சு. முழுக்க முழுக்க இயற்கை முறையிலதான் காய்கறிகளை உற்பத்தி செய்றோம். ஆரம்பத்துல இருந்தே சுயஉதவிக்குழு பெண்கள்தான் பராமரிக்கிறாங்க. எல்லா விவரத்தையும் இந்தப் பெண்களே சொல்லுவாங்க” என்று சொல்லிக் கிளம்பினார்.
சரோஜா, கருப்பாத்தாள், பேபி என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்களில் முதலில் பேசத் தொடங்கினார் சரோஜா.
மூங்கில் கூடையில் செடிகள்!
“மண் கலவை போடுறது, நடவு செய்றது, உரம் போடுறது, பூச்சிவிரட்டி அடிக்கிறதுனு எல்லா விஷயங்களிலும் மாவட்ட நிர்வாகம் எங்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கு. வழக்கமா வீட்டுத்தோட்டத்துல செடி வளர்க்க பிளாஸ்டிக் பாக்கெட், பை, மண்தொட்டிகளைத்தான் பயன்படுத்துவாங்க. நாங்க முழுக்க மூங்கில் கூடைகளைத்தான் பயன்படுத்துறோம். அதனால, செடிகளுக்குக் காற்றோட்டம் நல்ல முறையில கிடைக்குது. மண் நிரப்பிய மூங்கில் கூடைகளை வெறும் தரையில் வைக்காம, ரெண்டு சவுக்குக்குச்சிகளை ஏணி மாதிரி கட்டி அது மேலதான் வெப்போம். அதனால தண்ணீர் கசிஞ்சிடுறதோட, கூடையோட அடிப்பகுதி சேதமாகாது.
கீரை, காய்கறி, மூலிகை!
மொத்தம் 750 கூடைகள்ல... சிறுகீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணினு அதிகமா விற்பனையாகுற 10 வகையான கீரைகள்; கத்திரி, மிளகாய், அவரைனு 10 வகையான காய்கறிகள்; தூதுவளை, முடக்கத்தான், கீழாநெல்லினு 10 வகையான மூலிகைகள்னு வளர்க்கிறோம். அதுபோக கம்பு, சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்களும் இருக்கு. நெடும்பந்தல் அமைச்சு, பாகல், பீர்க்கன், சுரைக்காய்னு கொடிப் பயிர்களையும் வளர்க்குறோம்” என்ற சரோஜாவைத் தொடர்ந்தார், பேபி.
“ஒவ்வொரு கூடையிலும் 15 கிலோ மண், 5 கிலோ சாணம், 5 கிலோ ஆட்டு எரு, 5 கிலோ இலைதழை, 5 கிலோ தென்னை நார்க்கழிவு, 5 கிலோ மண்புழு உரம்னு கலந்து நிரப்பித்தான் விதையை நடவு செய்வோம். நடவுக்குப் பிறகு, மாதம் ரெண்டு தடவை பஞ்சகவ்யா தெளிப்போம். கீரைகள் 22 நாள்ல அறுவடைக்கு வந்துடும். இதுக்கு விற்பனை வாய்ப்பு அதிகமா இருக்கிறதால, 300 கூடைகள்ல கீரை வளக்கிறோம்” என்றார்.
நிறைவாகப் பேசிய கருப்பாத்தாள், “கீரை விதைகளைத் தூவிட்டு தினமும் லேசான ஈரப்பதம் இருக்குற அளவுக்கு தண்ணி தெளிக்கணும். முளைச்சு 10-ம் நாள்ல களை எடுத்து பஞ்சகவ்யா தெளிக்கணும். அவ்வளவுதான் கீரை விவசாயம்.
22-ம் நாள் ‘ஜம்’னு கீரை வளர்ந்து நிற்கும். அறுவடை பண்ணி, கட்டு கட்டி ‘ஆபீஸ் கீரை வாங்கலியோ... ஆபீஸ் கீரை’னு தெருவுல கூவினா போதும். பத்து நிமிஷத்துல கீரைக்கட்டு அம்புட்டும் காலியாகிடும். கீரை மட்டும் இல்லை. அப்பப்போ அறுவடையாகுற காய்களையும் இப்படித்தான் விற்பனை செய்றோம்” என்றார்.
  
மூங்கில் கூடை!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மூங்கில் கூடை உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. 75 ரூபாய் முதல் கிடைக்கும் இந்தக் கூடைகளில்தான் செடிகளை வளர்க்கிறார்கள். இவற்றில் செடிகளின் வேர் வளர்ச்சி நன்றாக இருப்பதால், மாடித் தோட்டத்துக்கு ஏற்றவையாக உள்ளன.
மூங்கில் கூடைகள் பாலித்தீன் பைகளைவிட அதிக ஆயுள் கொண்டவை என்பதால், வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள் மூங்கில் கூடைகளில் கவனம் வைக்கலாம். இது, மூங்கில் கூடை முடைபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
விளையும் இடத்திலேயே விற்பனை!
யூனியன் அலுவலகத்தில் விளையும் காய்கறிகளை, அங்கே வேலை செய்பவர்கள், அலுவல் நிமித்தமாக அலுவலகம் வந்து செல்பவர்கள் என அனைவரும் வாங்குவதால், விற்பனை சுலபமாக முடிந்து விடுகிறது. கீரைகளை மட்டும் தெருக்களில் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். இதில் வரும் வருமானத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான சம்பளம் போக, லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மகளிர் சுயஉதவிக்குழுவின் பெயரில் வங்கிகளில் வரவு வைக்கப்படுகின்றது.
பயன்படும் மூலிகைகள்!
சமீபகாலமாக மூலிகைகள் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தங்களுக்குத் தேவைப்படும் மூலிகைகளைத் தேடி அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இந்தத் தோட்டத்துக்கு வருகிறார்கள். குழந்தைகளின் சளி பிரச்னைக்கு துளசி; மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி என இங்குள்ள மூலிகைகளை இப்பகுதியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு!
இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக சில கூடைகளில் சிறுதானியங்களை (குறிப்பாக கம்பு) நடவு செய்திருக்கிறார்கள். சிறுதானியங்களைத் தின்பதற்காக வரும் பறவைகள், மற்ற செடிகளில் உள்ள புழுக்களையும் கொத்தித் தின்று விடுகின்றன.

(Thanks Vikatan)

No comments:

Post a Comment