Wednesday, March 1, 2017

Roof Farm-7

உரித்தோட்டம், கைப்பிடிச் சுவர்த்தோட்டம் மற்றும் சுவர்த்தோட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட வல்லுநர் பா.வின்சென்ட்.

“தரைப்பகுதியில் குறைந்த இடத்தில் அதிகத் தொட்டிகளை வைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது, உரித்தோட்டம். மாடியில் 5 முதல் 7 அடி உயரத்தில் உறுதியான கம்பிகளை ஒரு பக்க சுவரிலிருந்து மறுபக்க சுவர் வரை நீளவாக்கில் பொருத்த வேண்டும். தகுந்த இடைவெளியில் ஒரு கம்பி முதல் ஐந்து கம்பிகள் வரை கூட இதில் இருக்கலாம்.
இன்னும் எளிமையாகச் செய்ய நினைப்பவர்கள் துணிகள் காயப்போடும் கயிறுகளை நீளவாக்கில் கட்டுவது போல அமைத்துக் கொள்ளலாம். இதற்கு லாரி பாரம் கட்டும் தடிமனான நைலான் கயிறுகளைப் பயன்படுத்துவது நல்லது. அதில், கைக்கு எட்டும் உயரத்தில் தொட்டிகளைத் தொங்கவிட வேண்டும்.
தூக்குக் கம்பி பொருத்தப் பட்ட பிளாஸ்டிக் வாளிகள், உரிக்கென விற்கப்படும் பிரத்யேக பாத்திரங்கள், பயன்படுத்திய கிரீஸ், ஆயில் டப்பாக்கள் ஆகியவற்றில் செடிகளை வளர்க்கலாம். வளர்க்கும் பாத்திரத்தின் உயரத்தில் கால்பங்கு செறிவூட்டம் செய்யப்பட்ட தென்னை நார்க்கழிவு மற்றும் மண்புழு உரம், அசோஸ்பைரில்லம் ஆகிய மூன்றையும் கலந்து கொட்டி வைக்க வேண்டும். இக்கலவை இருக்கும் பகுதிக்கு மேல் பகுதியில் பாத்திரத்தைச் சுற்றிலும் பெருவிரல் புகும் அளவில் 5 துவாரங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, விருப்பப்பட்ட விதைகளை ஐந்து எண்ணிக்கையில் விதைக்க வேண்டும். ஐந்து துவாரங்கள் வழியே ஐந்து செடிகள் வெளிவந்து கிளை பரப்பி மகசூல் கொடுக்கும்.
உரித்தோட்டத்துக்கு உகந்த செடிகள்!
தக்காளி, அவரை, புதினா, பாலக்கீரை ஆகிய சிறு இலை தாவரங்களை மட்டுமே உரித்தோட்டத்தில் வளர்க்க முடியும். கொக்கியில் தொங்கும் வாளியின் பக்கத் துவாரங்கள் வழியே செடிகளின் கிளைகள் முழுமையாக வெளிவந்து, கீழ்நோக்கி காய்பிடித்து பழமாகும். இடையில் வழக்கம்போல் பூவாளிப் பாசனம் செய்யவேண்டும். மற்ற தரைத் தொட்டிகளுக்குச் செய்வது போலவே இதற்கும் பராமரிப்பு செய்தால் போதும். செடிகள் வழக்கமாக புவிஈர்ப்பு விசையினை எதிர்த்து, மேல் நோக்கி வளரும். ஆனால், உரித்தோட்டச் செடிகள் கீழ்நோக்கி வளர்வதால் வேர் வழியே உறிஞ்சப்படும் முழுமையான சத்து செடிகளுக்குக் கிடைக்கும். இதனால், காய்களின் எண்ணிக்கை மற்ற செடிகளைவிட அதிகம் இருக்கும். கீரைகளும் இதைப்போலவே தரமான மகசூலைக் கொடுக்கும்.
கை கொடுக்கும் கைப்பிடிச் சுவர்தோட்டம்!
மொட்டை மாடியைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக கைப்பிடிச் சுவர் கட்டுவோம். சுமார் 2 முதல் 3 அடி அகலம் கொண்ட அந்த கைப்பிடிச் சுவரில் கூட பசுமைப் போர்வை விவசாயம் செய்ய முடியும். இதற்கு 3 அடி உயரம், அரை அடி அகலம், 10 அடி நீளத்தில் செறிவூட்டம் செய்யப்பட்ட மண் கலவை நிரப்பிய பாலித்தீன் பைகள் கிடைக்கின்றன. அவற்றில் ஓட்டை போட்டு கீரை விதையை ஊன்றலாம். அரையடி இடைவெளியில் விதைக்கும்போது, 10 அடி நீள பையில் 20 செடிகளை வளர்க்கலாம்.

கைப்பிடிச் சுவரில் உள்ள நீளமான பை கீழே விழாமலிருக்க ஸ்டேண்ட் அமைத்துக் கொள்வது நல்லது. மாடியில் நான்கு புற  கைப்பிடிச் சுவரிலும் இப்படி அமைக்கலாம். இந்தப்பைகளில் விரைவான வளர்ச்சி, தண்ணீர் ஆவியாதல் குறைவு என்பதால் எப்போதும் நிரந்தர ஈரப்பதம், வேர் சம்பந்தமான நோய்த் தாக்குதல் அறவே இருக்காது. களைகள் வராது.
இதில் சிறிய வேர்களைக் கொண்ட கீரை, கொத்தமல்லித்தழை போன்ற செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக வெட்டப்பட்ட வாழை மரத்தின் தண்டில் அரை அடிக்கு ஒரு துவாரம் போட்டு, அதில் மண் கலவை நிரப்பி குறுகிய நாட்களில் மகசூலுக்கு வரும் கீரைகளை வளர்க்கலாம். வாழைத் தண்டிலிருக்கும் ஈரப்பதமே செடியின் வளர்ச்சிக்குப் போதுமானது. இதில் ஒரு மகசூல் மட்டுமே எடுக்க முடியும். வாழை மரத் தண்டு காய்ந்து விடுவதால் அடுத்த நடவு செய்ய முடியாது.
சுலபமான சுவர்தோட்டம்!
தற்போது பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் பிரபலமாகி வருகிறது, சுவர்தோட்டம். வீட்டுவெளிச் சுவரில் கைக்கெட்டும் அல்லது ஏணி வைத்து ஏறும் அளவில் தகுந்த இடைவெளியில் ஜாடிகள், வாய் அகன்ற பாத்திரங்கள், பிளாஸ்டிக் வாளிகள் போன்றவற்றைப் பொருத்தி செடிகள் வளர்க்கலாம். சுவரில் ஆணிகள் அடிப்பதைத் தவிர்க்கவும், செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் சுவரின் மீது கசியாமல் இருக்கவும் சுவரின் அளவுக்கு ஹார்ட்போர்டு  அல்லது மரப்பலகையை நிறுத்தி வைத்து அதில் அங்கங்கே பலகை தாங்கிகள் பொருத்தி தொட்டிகளை வைக்கலாம். இவற்றுக்கு சிறிய குவளை மூலம் நீரை ஊற்றுவது நல்லது. தற்போது, இந்த வகை சுவர்த் தோட்டத்தில் அழகுத் தாவரங்கள் மட்டுமே அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் ஏற்படும் இடப்பற்றாக்குறை சுவர்த் தோட்ட காய்கறி சாகுபடியை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
டைமர் பாசனம்!
கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போய் வருபவர்களாக இருக்கும் பட்சத்தில் வீட்டுத்தோட்டச் செடிகளுக்கு சரியான நேரத்தில் தண்ணீர் பாசனம் செய்யமுடியாது. அதற்கான நேரமும் அவர்களிடம் இருக்காது. அதற்கான மாற்றுத் தொழில்நுட்பம்தான் ‘டைமர்’ பாசனம். மாடியின் ஒரு மூலையில் குறைந்தபட்சம் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டேங்க் ஒன்றை தகுந்த உயரத்தில் வைத்து விடவேண்டும். அதிலிருந்து பிரதான குழாய் ஒன்றை எடுத்துச் சென்று அதில் இருபுறமும் துவாரம்போட்டு பயிருக்குத் தகுந்தாற்போல் மைக்ரோ குழாய்களை இணைத்து தனித்தனியாக தொட்டிகளில் விட வேண்டும். பிளாஸ்டிக் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள டைமரில் நேரத்தை செட் செய்து விட்டால், போதும், செடிகளுக்குத் தேவையான அளவில் நீர் பாய்ந்து விடும். இது பேட்டரியில் இயங்கக் கூடியது. இது போக சற்று அதிக செலவு செய்ய முடிந்தவர்கள் செல்போன் மூலம் இயங்கும் மோட்டார் ஸ்டார்ட்டரைப் பொருத்திக் கொள்ளலாம். இதை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும்” என்று ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் தெளிவாக விவரித்த வின்சென்ட், நிறைவாக
“வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான விதைகள் நாட்டு ரகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக தோட்டம் அமைப்பவர்கள் ஏற்கெனவே வீட்டுத்தோட்டம் வைத்துள்ளவர்களைத் தேடிப் போய் தரமான விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அருகில் உள்ள வேளாண்மைத் தோட்டக்கலை அலுவலகத்தில் விசாரித்தால், முன்னோடி விவசாயிகளின் முகவரிகள் கிடைக்கும். அவர்களிடமும் நாட்டு ரக விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதோடு, பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி போன்றவற்றைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களையும் வாங்கி வரலாம்.
தேடல் உள்ளவர்கள், வீட்டுத்தோட்டத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஜெயிக்கலாம்” என்றார்.

தோட்டக்கலைச் சிகிச்சை!
வீட்டுத்தோட்ட விவரங்களைக் கூறிய வின்சென்ட், “இன்றைய அதிவேக வாழ்க்கை முறையில் வேலைப்பளு, தூக்கமின்மை, நெரிசல் மிக்க பயணம், கடுமையான அலுவலக உழைப்பு, அதனால் ஏற்படும் மன உளைச்சல், உடல் சோர்வு போன்ற இன்னல்களால் சராசரி மனிதனின் இயல்பு வாழ்க்கை தொலைந்து போகிறது. மன அழுத்தம் காரணமாக தேவையில்லாத கோபம், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் வெளிப்படுத்துகிறான். அதற்கு எளிய மற்றும் சிறப்பான தீர்வு தருகிறது, தோட்டக்கலைச் சிகிச்சை.
அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டவரும், அந்நாட்டின் மனநல மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவருமான டாக்டர்.பெஞ்சமின் ரஷ் என்பவர்...
1798-ம் ஆண்டு ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டார். மனநலம் குன்றியவர்களுக்கு தோட்டக்கலை மூலம் சிகிச்சை தருவதால், அவர்களின் மனநிலையை மேம்படுத்தலாம் என்பதுதான் அந்த மருத்துவ கண்டுபிடிப்பு.
இன்று வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாக தோட்டக்கலைச் சிகிச்சை உருவெடுத்துள்ளது. நாள்தோறும் தோட்டங்களில் வலம் வருபவர்களுக்கு மன ஒருமைப்பாடு, புத்துணர்வு, தெளிவு ஆகியவை கிடைக்கின்றன.
வயதானவர்களுக்கு உடல் ரீதியான வலிமை, சுறுசுறுப்பு, தெளிவான கண்பார்வை ஆகிய முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு பார்த்தல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல் மூலம் வீட்டுத்தோட்டங்கள் அவர்களுக்கு இயற்கை குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், கவனம், புதிய தொழில்நுட்பத்தை மனம் நாடுதல், பிரச்னைகளுக்கு தீர்வு, நினைவாற்றல், கூட்டுக்குடும்பத்தில் சுமூக உறவு ஆகியவற்றை மனிதர்களுக்குக் கொடுக்கும் அற்புதவனம்தான், வீட்டுதோட்டம்.
இது நஞ்சில்லாக் காய்கறிகளை நமக்குக் கொடுப்பதுடன் சமூகத்தில் ஒரு மதிப்பையும் தேடிக்கொடுக்கிறது. எனவே, வீட்டுக்கு வீடு தோட்டம் அமைப்போம்... வேதனை இல்லா உலகம் சமைப்போம்” என்று அற்புதமான தகவலையும் பகிர்ந்தார்.

(Thanks Vikatan)

No comments:

Post a Comment