Tuesday, March 7, 2017

Roof Farm-18

சென்னை, முகப்பேரில் வசிக்கும் கலிங்கராணி, மாடித்தோட்டம் அமைத்து மூலிகைகளையும், காய்கறிகளையும் விளைவித்து வருகிறார்.

கலிங்கராணி சொல்வதைக் கேட்போமா...
“நான் அரசு மருத்துவமனையில 25 வருஷமா நர்ஸா வேலை பார்த்துட்டு விருப்ப ஓய்வு வாங்கிட்டு வீட்டுல இருக்கேன். எட்டு வருஷமா இந்தச் செடிகள்தான் எனக்கு மன நிம்மதியைத் தந்துக்கிட்டு இருக்கு. பொதுவாவே எனக்கு தோட்டம்னா சந்தோஷமா இருக்கும். ஆரம்பத்துல தக்காளி, கத்திரிக்காய்னுதான் நட ஆரம்பிச்சோம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, முடக்கத்தான், பொன்னாங்கன்னி, ஓமவல்லி, கற்றாழை, பப்பாளி, சப்போட்டா, பூக்கள், மூலிகைகள்னு வளர்க்க ஆரம்பிச்சிட்டோம். ஒரு தாமரைக்குளம் அமைச்சு அதுல மீன்கள் விட்டிருக்கோம். முன்னெல்லாம் தினமும் அரை மணி நேரம்தான் செடிகளைப் பராமரிப்பேன். இப்போ, முழுநேரமும் செடிகள்தான் எனக்கு. என்னோட குழந்தையை வளர்த்தெடுக்கிற மாதிரி சந்தோஷமா இருக்கு. செடிகளைப் பார்த்தாலே மனசுல இருக்கிற கவலையெல்லாம் பறந்துடும்.
சுவர்த்தோட்டம்!

எங்க பார்த்தாலும் பசுமையா இருக்கணும்னு ஆசைப்பட்டு சுவரைக் கூட விட்டு வைக்கலை. சுவரோட மேற்பகுதியில சின்னச் சின்னதா செடிகள் முளைக்கும். அதையெல்லாம் பிடுங்கிப் போடுவோம். அப்பறம்தான் சுவர்லயே செடி வளர்த்தா என்னனு யோசிச்சு, குரோட்டன்ஸ் செடிகளை வெச்சு விட்டுட்டோம்” என்ற கலிங்கராணி பராமரிப்பு முறைகளைச் சொன்னார்.

வேர்ப்புழுவுக்குக் கற்றாழை!
“எங்க வீட்டுச் செடிகளுக்கு பெரும்பாலும் இயற்கை உரத்தைத்தான் பயன்படுத்துறோம். தேமோர்க்கரைசல் தயாரிச்சு வாரம் இரண்டு முறை தெளிப்போம். சமையலறையில  வீணாகிற வெங்காயத் தோல், காய்கறிக் கழிவுகள், சாணம், மண்புழு உரம்னு எல்லாத்தையும் உபயோகப்படுத்துறோம். காய்கறிச் செடிகளுக்கு வெயில் கிடைச்சாத்தான், பூ கொட்டுறது நிற்கும். காய் பிடிப்பு அதிகமா இருக்கும். அதனால, வெயில்லதான் வெச்சிருக்கோம். அதிக வெயில் சமயத்துல நிழல்வலை போடுவோம். சப்போட்டாவுல வேர்ப்புழுத் தாக்குதல் இருந்துச்சு. எங்க வீட்டுல இருக்குற கற்றாழையை
எடுத்து துண்டு துண்டா வெட்டி வேருக்குப் பக்கத்துல புதைச்சு வெச்சவுடனே புழுக்கள் ஓடிடுச்சு. அதே மாதிரி வேற பூச்சிகள் வந்தா, பெருங்காயத்தை தண்ணியில கலந்து தெளிப்போம். ரொம்ப அதிகமா பூச்சிகள் வந்தா, வெள்ளைப் பூண்டு அரைச்சு வேப்பெண்ணெய், தண்ணீர் கலந்து தெளிப்போம்” என்று தொழில்நுட்பம் சொன்ன கலிங்கராணி,
“மாடித்தோட்டம் அமைக்க அதிக இடம் இருக்கணும்னு அவசியமில்லை. நமக்குத் தேவையான செடிகளைத் திட்டமிட்டு இருக்கிற இடத்துல வளத்தெடுத்துக்கலாம். ரொம்ப வெயில் அடிக்கிற சமயத்துல நிழல் வலை தேவைப்படும். பிளாஸ்டிக் வாளிகள், மண்தொட்டிகள்னு எதை வேண்டும்னாலும் உபயோகப்படுத்தலாம். மண், மண்புழு உரம், மாட்டு எரு மூணையும் கலந்து தொட்டிகள்ல நிரப்பி செடிகளை வளர்த்துட முடியும்” என்றார்.

நஞ்சில்லா காய்கறிகள்!
நிறைவாகப் பேசிய கலிங்கராணி, “மாடித்தோட்டம் மூலமா இயற்கைக் கீரைகள், பழங்கள்னு கிடைக்குது. தினசரி பூஜைக்குத் தேவையான பூக்களும் கிடைக்குது.
மூலிகைகள், காய்கறிகள்னு எதுக்கும் வெளிய போறதில்லை. எங்க தோட்டத்துல இருக்கிற காய்கறியை வெச்சு சமையலைத் திட்டமிட்டுக்குவேன். இது மூலமா காய்கறிச் செலவு, பூக்கள் வாங்குற செலவு எல்லாம் ரொம்பவே குறையுது. அதில்லாம, தினமும் மாடித்தோட்டத்துல வேலை செய்றது உடற்பயிற்சியாவும் அமைஞ்சிடுது. அதனால சுறுசுறுப்பாவும், சந்தோஷமாவும் இருக்கேன்” என்றார், உற்சாகமாக.

சுவைக்கூட்டும் தேமோர்!
தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும். இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.
தயாரிப்பு முறை: ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

No comments:

Post a Comment