Tuesday, March 7, 2017

Roof Farm-16

 600 சதுர அடி...மாடியில் விளையும் பன்னீர் திராட்சை!
ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம்பிடிக்கின்றன.
‘பாடிய வாயும் ஆடிய காலும் சும்மா இருக்காது’ என்பார்கள். அதுபோலதான் விவசாயமும். கடும்வறட்சி காரணமாக வயலெல்லாம் காடாகி காய்ந்து போய் கிடக்கும் நிலையில்... ‘தன் வீட்டு மொட்டை மாடியையே திராட்சைத் தோட்டமாக்கி விவசாயத்தைத் தொடர்கிறார், ஒரு விவசாயி’ என்ற தகவல், நம்மை வந்தடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலூகா, சித்தூர் பஞ்சாயத்து, புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்தான் அந்த விவசாயி. அவரைச் சந்திப்பதற்காகப் பயணமானோம். வேடசந்தூர், எரியோடு சாலையில் பூத்தாம்பட்டி என்ற ஊர் எல்லையில், வடக்குத் திசையில் பிரியும் தார்ச்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, புளியம்பட்டி. போகும் வழியில் விவசாயத்தையே பார்க்க முடியவில்லை. கடுமையான வறட்சியில் நிலமெல்லாம் பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கின்றன. நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாததால் துருப்பிடித்துக் கிடக்கின்றன, பம்ப்செட் மோட்டார்கள்.
சுமார் 100 வீடுகளே இருக்கும் சின்ன கிராமம். கோயிலை ஒட்டிய சிமென்ட் பாதையில் குறுகலான சந்தில் இருக்கிறது, செல்வராஜின் வீடு. வீட்டுவாசலில் இருக்கும் மல்லிகைச் செடியைக் கவாத்து செய்து கொண்டிருந்தவரைச் சந்தித்து, திராட்சைத் தோட்டம் பற்றிக் கேட்டதும் ஆர்வமானவர், மாடிக்கு அழைத்துச் சென்றார். மொட்டை மாடியில் வெயிலே தெரியாத வகையில் பசுமைப் போர்வை போர்த்தி இருந்தது, பன்னீர் திராட்சைப் பந்தல். உள்ளே கொத்துக்கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன திராட்சைப் பழங்கள். திராட்சைத் தோட்டத்துக்குள் நுழைந்த பிரமிப்பில் இருந்த நம்மிடம் ஒரு கொத்தை நீட்டி, ‘‘சாப்பிட்டுப் பாருங்க” எனக் கொடுத்து விட்டு, பேசத் தொடங்கினார், செல்வராஜ்.
ஏமாற்றிய மழை!
‘‘எங்களுக்குப் பரம்பரையா விவசாயம்தான் தொழில். அப்பா காலத்துல நல்லபடியாத்தான் சம்சாரித்தனம் பண்ணிக்கிட்டிருந்தோம். ஒரு காலத்துல முருங்கை, நெல்லு, கடலைனு பெருங்கொண்ட விவசாயம் நடந்துகிட்டிருந்த ஊருதான். இடையில, மழைத் தண்ணியில்லாம கெணறுக வத்திப்போச்சு. எங்க ஊர்ல நல்லா மழை பேஞ்சி ஏழெட்டு வருஷமாச்சு. காசு பணம் இருக்கிறவங்க போர் போட்டு வெள்ளாமை பண்ணுனாங்க. என்ன மாதிரி இல்லாதவங்க, கெணத்தை அப்படியே போட்டுட்டு கூலி வேலைக்குக் கிளம்பிட்டோம். உழவு ஓட்டுறது, பிளம்பிங், கொத்தனார், கம்பி கட்டுறதுனு கிடைக்கிற வேலைக்குப் போயி பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
சின்னவயசுல இருந்தே எனக்கு மரம் வளர்க்கிறதுல ரொம்ப ஆர்வம். வீட்டைச் சுத்தி மாதுளை, மல்லிகைனு நட்டு வளர்த்துக்கிட்டு இருந்தேன். எங்கயாவது வெளியூருக்குப் போனா, அங்க இருந்து ஏதாவது கன்னை வாங்கிட்டு வந்து நட்டு வளர்ப்பேன். ஆறு வருஷத்துக்கு முன்னகூட கேரளாவுக்கு கூலி வேலைக்குப் போயிட்டு வரும்போது, கொஞ்சம் கன்னுகளை வாங்கிட்டு வந்து ஊர் எல்லையில இருக்கிற கோவில் பக்கத்துல நட்டு வெச்சிருக்கேன். ஆல், அரசு, புங்கன் மாதிரியான மரங்களோட நாத்துகளை வாங்கிட்டு கொஞ்சம் பெருசா வளர்த்து, கோவில்களுக்கு இலவசமா கொடுத்துடுவேன்.

கற்றுக்கொடுத்த விவசாயிகள்!
என் வீட்டம்மா, வேலைக்குப் போற வீட்ல ரெண்டு திராட்சைக் கொடிகள் நட்டு வெச்சிருந்ததைப் பாத்துட்டு வந்து சொன்னாங்க. உடனே, எனக்கும் திராட்சை நடணும்னு ஆர்வமாகிடுச்சு. அந்த வீட்டுல போய் பார்த்தேன். அப்பறம் திண்டுக்கல் மாவட்டத்துல, திராட்சை அதிகமா விளையுற சின்னாளபட்டி பக்கத்துல இருக்கிற ஊத்துப்பட்டியில போயி சில விவசாயிங்களோட தோட்டங்களைப் பாத்தேன். திராட்சை நடவு, பராமரிப்பு, கவாத்துனு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தாங்க. சாகுபடி முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டு, அவங்ககிட்டயே முப்பது குச்சி வாங்கிட்டு வந்து பிளாஸ்டிக் பையில வெச்சு வளர்த்து நடவு போட்டேன்” என்ற செல்வராஜ், இவற்றை வளர்த்தெடுக்க கொஞ்சம் மெனக்கெடத்தான் செய்திருக்கிறார்.
10 செடிகளில் படர்ந்த பந்தல்!
“வீட்டைச் சுத்தி ரெண்டடிதான் இடமிருக்கு. மாடியில திராட்சைப் பந்தல் போட்டுக்கலாம். ஆனா, மாடியில செடியை நட முடியாது. தொட்டிகள்ல வெச்சாலும் வேர் பெருசானா தொட்டி தாங்காது. என்ன பண்ணலாம்னு யோசிச்சு, வீட்டைச் சுத்தி செடியை நட்டு, கயிறு மூலமா மாடிக்குக் கொடியை ஏத்தி, பந்தல்ல படர விட்டேன். பந்தல் அமைக்கிறதுக்கு பழைய இரும்புக் குழாய்களைப் பயன்படுத்தியிருக்கேன். இதுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாச்சு.
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இப்ப கொத்துக்கொத்தா பழங்களைப் பாக்கும்போது, அந்த கஷ்டமெல்லாம் காணாமப் போயிடுச்சு. இதை நட்டு ரெண்டு வருஷமாச்சு. இப்ப என்கிட்ட 10 செடிகள் இருக்கு. அதுகளோட கொடிதான் மாடியில படர்ந்திருக்கு. வருஷத்துக்கு ஒரு தடவை 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை வாங்கி, தண்ணியில கரைச்சு, செடியோட வேர்கிட்ட ஊத்துவேன். காய் பிடிக்குற நேரத்துல ஒரு பூச்சி வரும். அதுக்கு மட்டும் கடையில பூச்சிக்கொல்லி வாங்கித் தெளிப்பேன். இதுபோக வேற எதையும் கொடுக்குறதில்ல.

300 கிலோ மகசூல்!
இதுவரைக்கும் மூணு தடவை பழம் வெட்டியிருக்கோம். 800 சதுர அடியில மாடி இருக்கு. அதுல 600 சதுர அடியில பந்தல் இருக்கு. முதல் தடவை 70 கிலோ கிடைச்சது. அடுத்த தடவை 130 கிலோ. இந்தத் தடவை இதுவரைக்கும் 150 கிலோவுக்கும் மேல எடுத்திட்டோம். இன்னும் 150 கிலோ கிடைக்கும்னு நினைக்கிறேன். செலவுனு பாத்தா வருஷத்துக்கு 1,500 ரூபாய் ஆகும். இந்தப் பழங்களை விலைக்குக் கொடுக்கறதில்லை. வீட்டுத்தேவை போக, சொந்தக்காரங்களுக்கும், ஊர்ல இருக்கிற சின்னப் பசங்களுக்கும் இலவசமா கொடுத்திடுவேன். அதுபோக, அணில், காக்கா வந்து தின்னுட்டுப் போகும். அதை நான் தடுக்கறது இல்லை. அதுக தின்ன மீதிதான் நமக்கு” என்ற செல்வராஜ்,
“மொதல்ல, வெவசாயம் பாக்காம, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். இந்தத் தோட்டம் போட்ட பின்னாடி, அந்த நினைப்பு இல்லை. காலையில, சாயந்திரம்னு எப்ப ஓய்வு கிடைச்சாலும் மாடிக்கு வந்திடுவேன். இதையும் தோட்டமா நினைச்சுத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னபோது, அவருடைய மனதில் குடிகொண்டிருக்கும் மகிழ்ச்சியை நன்றாகவே உணர முடிந்தது!

(Thanks Vikatan)

No comments:

Post a Comment