Tuesday, March 7, 2017

Roof Farm-14

வீட்டுத்தோட்டம் அமைப்பதென்றால்... நிறைய இடம் தேவை, நிறைய நேரம் தேவை என்றெல்லாம் மலைத்துத்தான் பலரும் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், “அதெல்லாம் தேவையேயில்லை. மனம் இருந்தால் போதும் மார்க்கம் உண்டு’’ என்கிறார், மாடித்தோட்டம், மற்றும் புறத்தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்து வரும், கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராஜா.

“அடிப்படையில் நான் ஒரு மென் பொருள் பொறியாளர். வளர்ந்தது எல்லாமே கிராமத்திலதான். அதனால விவசாயம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் அதிகம். சொந்த வீடு வாங்கி தோட்டம் அமைக்கணும்னு நினைச்சேன். சென்னையில் வசிக்கும் போது அது முடியலை. கோயம்புத்தூருக்கு வந்த பின்னாடி, தோட்டம் அமைக்கறதுக்காகவே காலி இடம் இருக்கிற மாதிரியான வீட்டைத் தேடிப் பிடிச்சு வாங்கினேன்.
நல்ல இடமா அமைஞ்சதால மரங்களும் வளர்க்க முடிவு பண்ணினேன். பெருசா கிளையடிக்கிற மரமா இல்லாம, கொய்யா, நெல்லி, மா, எலுமிச்சை, சீதாப்பழம், தென்னை, சப்போட்டா, முருங்கைனு ரகத்துக்கு ஒண்ணா எட்டு மரங்களை நட்டேன். வீட்டுத்தோட்டம் பத்தி சில இடங்கள்ல பயிற்சி எடுத்துக்கிட்டு... நாலு வருஷத்துக்கு முன்னாடி வீட்டைச் சுத்தி இருந்த காலி இடங்கள், மொட்டை மாடினு எல்லா இடத்துலயும் தோட்டம் அமைச்சேன்” என்ற சிவராஜா அவரது வீட்டுத்தோட்டச் செடிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
ஆன்லைன் மூலமாக நாட்டு விதைகள்!

‘‘மாடியில் அதிக வேர் விடுற செடிகளை வளர்க்க முடியாது. அதனால கத்திரி, தக்காளி, மிளகாய், முட்டைக்கோஸ், 8 வகை கீரைகள், முலாம்பழம், வெங்காயம், சோளம், மக்காச்சோளம், வெண்டை மாதிரியான பயிர்களை மாடியில வளர்க்கிறேன். பெரும்பாலும் நாட்டு விதைகளைத்தான் பயன்படுத்துறேன். இப்ப ஆன்லைன்ல கூட நாட்டு விதைகள் கிடைக்குது.
20 பைங்க உள்ள தோட்டம் அமைக்க 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம். ஆனா, ரெண்டே மாசத்துல அதை ஈடுகட்டிடலாம். மாடித்தோட்டத்துக்கு நிழல் வலை அமைக்கணும்ங்கிற அவசியம் கிடையாது.

நாங்க, ஒரே நேரத்திலதான் எல்லா செடிகளையும் விதைப்போம். முழுமையா அறுவடை முடிஞ்ச பிறகு, ஒரு மாசத்துக்கு தோட்டத்துக்கு ஓய்வு கொடுத்திடுவோம். தோட்டம் அமைக்கிறதோட முக்கிய நோக்கமே நம்மளோட ஆரோக்கியமும், திருப்தியும்தான். அது இப்ப முழுமையா கிடைக்கிறதா நான் நம்புறேன். எங்க தேவைக்கு அதிகமாகவே காய்கறிகள் விளையுது.  அதை பக்கத்து வீடுகளுக்குக் கொடுக்கிறோம்” என்ற சிவராஜா நிறைவாக,
நகர வாழ்க்கையிலும் இயற்கை!
“வீட்டைச்சுத்தி மரங்கள் இருக்கறதால தினமும் குருவி, மைனா மாதிரியான பறவைங்க, வீட்டுக்கு வருது. சில நேரத்துல இங்கயே கூடு கட்டுது. இதையெல்லாம் பார்க்கிறப்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.
பசுமையான சூழல் இருக்கிறதால வீடு எப்பவும் குளுமையாவே இருக்கு. வீட்டுத்தோட்டம் அமைக்கிறதுல நான் கத்துக்கிட்ட, கத்துக்கிற விஷயங்களை என்னோட வலைப்பக்கத்துல பதிவு செய்துக்கிட்டு வர்றேன். அதைப் பார்த்தும் பலர் ஆர்வமா இதுல இறங்கியிருக்காங்க. நீங்களும் வீட்டுத்தோட்டம் அமைச்சுப் பாருங்க... நகர வாழ்க்கையில் கூட இயற்கையை ரசிக்க முடியும்’’ என்றார்.

No comments:

Post a Comment