Tuesday, March 7, 2017

Roof Farm-13

வீட்டுத்தோட்டம் அமைப்பதின் முக்கிய நோக்கம்... தமது குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை ரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தாமல் நாமே உற்பத்தி செய்துகொள்வதுதான். ‘நஞ்சில்லாத காய்கறிகளைச் சாப்பிடுங்கள்’ என்று நமக்கு அறிவுறுத்துபவர்கள், பெரும்பாலும் மருத்துவர்கள்தான். இப்படி அறிவுரை சொல்வதோடு மட்டும்  நிறுத்திக்கொள்ளாமல் பல மருத்துவர்கள் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். பலர், வீட்டுத்தோட்டம் அமைத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரில் மருத்துவமனை நடத்தி வரும் மகப்பேறு மருத்துவர் ஈஸ்வரி.

தன்னுடைய மாடித்தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த ஈஸ்வரியைச் சந்தித்தோம். ‘‘என்னோட கணவர் அருள் நல்லசாமியும் மருத்துவர்தான். அவருக்கு புகைப்படம் எடுப்பது ரொம்ப பிடிக்கும். இயற்கை மேல ரொம்ப ஈர்ப்பு அவருக்கு. இயற்கை வளங்களும் வனவாழ் இனங்களும் அழியக்கூடாதுங்கிற எண்ணம் கொண்டவர். படிக்கிற காலத்தில் மலைவாழ் மக்களைத் தேடிப் போயிடுவார். காடுகள், மலைகள்னு சுத்தி அங்க இருக்குற மக்களுக்கு உதவி செய்றது, இயற்கையைப் புகைப்படம் எடுக்குறது அவருக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையிலதான், மாடித்தோட்டம் போட்டு இயற்கை விவசாயம் செய்றோம். மருத்துவமனையும் வீடும் ஒரே இடத்தில் இருக்கிறதால தோட்டத்தைப் பராமரிக்கிறது சுலபமா இருக்கு.
இப்போ, பத்திரிகை, தொலைக்காட்சி எல்லாத்துலயும் பூச்சிக்கொல்லியால் வர்ற பாதிப்புகள் பத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்திக்கிட்டே இருக்காங்க. தாய்ப்பால்லகூட விஷ மூலக்கூறுகள் இருக்கிறதா சொல்றாங்க. மருத்துவர்ங்கிற முறையில் எங்ககிட்ட சிகிச்சைக்கு வர்றவங்ககிட்ட விஷமில்லா காய்கறிகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திக்கிட்டிருக்கோம். மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்னுதான் மாடித்தோட்டம் அமைச்சோம்” என முன்கதை சொன்ன ஈஸ்வரி, தனது மாடித்தோட்டம் குறித்து விளக்கினார்.
சிமென்ட் தொட்டியில் காய்கறி!

“ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பைகளில்தான் காய்கறிகள், கீரைனு வளர்த்தோம். அதுல வேர் அதிக ஆழத்துக்குப் போற கத்திரி, தக்காளி மாதிரியான பெரிய செடிகளை வளர்க்க முடியலை. அதுக்கப்பறம்தான் நண்பர் ஒருத்தர் சொன்ன ஆலோசனையை வெச்சு... மாடி சுற்றுச்சுவரை ஒட்டி ஹாலோபிளாக் கல்லால நீளமா தொட்டி கட்டி அதுல செடிகளை வளர்க்குறோம். 10 அடி நீளம், 3 அடி அகலம், 5 அடி உயரங்கிற அளவுல 6 தொட்டிகள் இருக்கு. அதில் 2 அடி உயரத்துக்கு சலித்த மணலைக் கொட்டி அடுத்த அடுக்கா அரையடி உயரத்துக்கு மண்புழு உரம் போட்டிருக்கோம். அடுத்த அடுக்கா இரண்டடி உயரத்துக்கு கட்டியில்லாத செம்மண்ணைப் போட்டு அதுலதான் செடிகளை நட்டிருக்கோம். அடியில மணல் இருக்கிறதால தொட்டியில கசிவு இருக்காது.
மண்புழு உரம் ஈரப்பதத்தோடவே இருக்கும். செம்மண் போட்ட பிறகு ஒவ்வொரு தொட்டிக்கும் 10 கிலோ ஆட்டு எருவை, பொடியாக்கி தூவி மண் நல்லா ஈரமாகுற அளவுக்கு தண்ணீர் ஊத்தி ரெண்டு நாள் விட்டா, தண்ணீர் சுண்டிடும். அதுக்கப்பறம் லேசா தண்ணீர் விட்டு காய்கறி நாற்றுக்களை ஈர நடவு செய்திருக்கோம். அவரை, வெண்டை, தக்காளி, மணத்தக்காளினு கீரை, காய்கறிகள் எல்லாத்தையும் சாகுபடி செய்றோம். தோட்டத்துப் பாத்தியில வளர்ற மாதிரி இங்க செடிகள் வளருது.
15 நாளுக்கு ஒரு முறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து தெளிப்போம். பூச்சிகள் தென்பட்டால் 5 மில்லி நீம் ஆயிலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்போம். ஒவ்வொரு முறை பூக்கும் பருவத்திலும் பொடித்த ஆட்டு எருவை செடிகளோட வேர்ப்பகுதியில தூவி தண்ணீர் விடுவோம். அடுத்து சில தொட்டிகள்ல கம்பு நடலாம்னு இருக்கோம். கம்பு மணிகளைச் சாப்பிட வர்ற பறவைகள் செடிகள்ல இருக்குற பூச்சிகளையும் சாப்பிட்டுடும்ல” என்று இயற்கைத் தொழில்நுட்பம் சொன்ன ஈஸ்வரியைத் தொடர்ந்தார், அவருடைய கணவரான மருத்துவர் அருள்நல்லசாமி,
‘‘காய்கறிகள் மட்டுமல்ல கேழ்வரகு, தினை, வரகு போன்ற சிறுதானியப் பயிர்களையும் மாடியில் வளர்க்க முடியும். அதற்கு இந்தத் தொட்டி பாத்தி முறை சிறப்பானது. மாடியில் நெல் வயல் கூட அமைக்கலாம். வரும் காலங்களில் கண்டிப்பாக எங்கள் வீட்டு மாடியில் பச்சை வயலைப் பார்க்கலாம்’’ என்றார், நம்பிக்கையுடன்!

(Thanks Vikatan)

No comments:

Post a Comment